
ஃபண்ட் கிளினிக்
இலக்குகளுக்கு முழுமையாக முதலீடு செய்ய முடியாதபட்சத்தில், வருமானம் உயர உயர முதலீட்டை உயர்த்திக்கொண்டே வரலாம்!
என் வயது 27. அடுத்த 10, 13 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆவதே என் இலக்கு. கடந்த மூன்று ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் சில ஃபண்டுகளில் மாதந்தோறும் ரூ.26,000 முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகள் சரியாக உள்ளனவா?
என் முதலீடுகள்… மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.6,000, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் ரூ.5,000, ஆதித்ய பிர்லா டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.3,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.3,000, நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.3,000. நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000.
– ஸ்ரீதர் ராஜகோபால், மதுரை
“உங்கள் இலக்கு கோடீஸ்வரன் ஆவதென்றால், அதற்காக நீங்கள் செய்யும் முதலீட்டுத் தோகை போதுமானதாக இருக்கிறதா என்பதை முதலில் பாருங்கள். ஒரு மாதத்துக்கு ரூ.26,000 முதலீடு செய்யும்பட்சத்தில், 13 ஆண்டுகளில் அது ரூ.97 லட்சமாக இருக்கும். ஆனால், நீங்கள் 12% வருமானம் கொடுக்கும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்து அதைப் பராமரித்து வர வேண்டும். உங்கள் இன்றைய போர்ட்ஃபோலியோவில் அஸெட் அலொகேஷன் ஓரளவுக்குச் சரியாக இருக்கிறது. உங்கள் போர்ட்ஃபோலியோவிலுள்ள நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் கடந்த ஓராண்டுக் காலமாக மிகவும் மோசமாகச் செயல்பட்டு் வருகிறது. ஆனால், அதிலுள்ள பங்குகள் நன்றாக இருக்கின்றன. இதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள். ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டில் அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையெனில், அதிலிருந்து வெளியேறி வேறு லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். உங்களிடமிருக்கும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டி ஃபண்டை நிறுத்திவிட்டு, கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும்.”

என் வயது 40. நான் கடந்த ஐந்து வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறேன். தவிர, மூன்று முதலீடுகளை ஒரே தவணையிலும் செய்திருக்கிறேன். 15 வருடங்கள் தொடவிருக்கிறேன். பிள்ளைகளின் உயர் கல்வி மற்றும் ஓய்வுக்காலத்துக்கு முதலீடு செய்து வருகிறேன்… ஏதேனும் மாற்றம் தேவையா?
என் முதலீடுகள்… ஒரே தவணை: டி.எஸ்.பி ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1 லட்சம், ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மால் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.3 லட்சம், ஃப்ராங்க்ளின் ஷார்ட் டேர்ம் இன்கம் ஃப்ண்ட் ரூ.3 லட்சம். மாதாந்தர எஸ்.ஐ.பி: ஃப்ராங்களின் இந்தியா புளூசிப் ஃப்ண்ட் ரூ.5,000, ஃப்ராங்களின் இந்தியா ஈக்விட்டி ஃப்ண்ட் ரூ.5,000, ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. பேங்கிங் சர்வீசஸ் ரூ.5,000, ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு ஃபண்ட் ரூ.2,500, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்ட் ரூ.2,500
– ராம், திருச்சி
“நீங்கள் ஒரே தவணையில் முதலீடு செய்த ஃப்ராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் ஃபண்டில் பணம் வருவதற்குச் சில ஆண்டுகள் பிடிக்கும். உங்களிடமுள்ள ஈக்விட்டி முதலீட்டில் ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட், ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டி ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளை நிறுத்திவிடவும்.
அவற்றுக்கு பதிலாக, கனரா ராபிகோ புளூசிப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் லார்ஜ்கேப் ஃபண்ட், டி.எஸ்.பி ஈக்விட்டி அண்ட் பாண்ட் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும். மற்ற ஃபண்டுகளில் உங்கள் முதலீட்டை அப்படியே தொடரவும்.”
நான் பின்வரும் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்து வருகிறேன். எனக்கு அடுத்த 15 வருடங்களில் ரூ.2 கோடி சேர்க்க வேண்டும். என் மகனின் மேற்படிப்புக்கும், என் ஓய்வுக்காலத்துக்கும் முதலீடு செய்து வருகிறேன். என் இலக்கை அடைய என் முதலீட்டில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?
என் முதலீடுகள்… ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட் ரூ.1,500, எல் அண்ட் டி எமெர்ஜிங் பிசினஸஸ் ஃபண்ட் ரூ.1,500, மோதிலால் ஆஸ்வால் மல்டிகேப் 35 ஃபண்ட் ரூ.1,500, நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் ரூ.1,500, சுந்தரம் டைவர்சிஃபைடு ஃபண்ட் ரூ.1,500.
– நவீன், மெயில் மூலமாக
“அடுத்துவரும் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.39,500 முதலீடு செய்துவந்தால் உங்கள் இலக்கான ரூ.2 கோடியை அடைய முடியும். இது நீங்கள் இப்போது செய்துவரும் முதலீட்டைவிட மிக மிக அதிகமான தொகை. நீங்கள் உங்கள் வரவு செலவு கணக்கை நிர்ணயம் செய்துவிட்டு, மீதமிருக்கும் உபரிப் பணத்தில் சராசரியாக 60% பங்குச் சந்தையில் முதலீடு செய்து வர வேண்டும். அப்படி இல்லையெனில், வருமானம் உயர உயர அதற்கேற்ப முதலீட்டை உயர்த்திக்கொண்டே வர வேண்டும்.
ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா ஃபண்ட், எல் அண்ட் எமெர்ஜிங் ஃபண்ட், சுந்தரம் டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்ட் போன்றவற்றை நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட், கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்யவும்.
உங்களிடமுள்ள நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்ட் கடந்த ஓராண்டு காலமாக மிகவும் மோசமாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அதிலுள்ள பங்குகள் நன்றாக இருக்கின்றன. இதைக் கூர்ந்து கவனித்து வாருங்கள். ஆறு மாதங்கள் அல்லது ஓராண்டுக்குப் பிறகும் அதன் செயல்பாட்டில் முன்னேற்றம் இல்லையென்றால் அதிலிருந்து வெளியேறி, வேறு லார்ஜ்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
நான் 2019, செப்டம்பர் முதல் ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட், இன்வெஸ்கோ இந்தியா குரோத் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், மிரே அஸெட் லார்ஜ்கேப் ஃபண்ட், மிரே அஸெட் ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் தலா ரூ.5,000 வீதம் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீடுகள் சரியாக உள்ளனவா..?
– ஜி.ஆனந்த பிரசாந்த், சென்னை
“நீண்டகால இலக்கின் அடிப்படையில் போர்ட்ஃபோலியோ உருவாக்கும்போது எல்லா முதலீட்டு வகைகளிலும் கலவையாக முதலீடு செய்துவந்தால் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவின் வருமானம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
இப்போது உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் மிட்கேப் முதலீடு இல்லை. நீங்கள் ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்டை நிறுத்திவிட்டு, ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டுகளை அப்படியே தொடரவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 07.06.2020 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.