என் வயது 43. அரசுப் பணியில் இருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். நான் முதலீடு செய்துவரும் ஃபண்டுகள்… ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி ஃபண்ட் ரூ.5,000, ஃப்ராங்க்ளின் இந்தியா ஸ்மாலர் கம்பெனீஸ் ஃபண்ட் ரூ.5,000. இந்த ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரலாமா?
– தி.வாஞ்சிநாதன், கும்பகோணம்
“சில ஆண்டுகளாக ஃப்ராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்டின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. எல்லா ஃபண்டுகளும் எல்லா நேரங்களிலும் நன்றாகச் செயல்படுவது கடினம். ஆனாலும் நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்ட் அதன் கேட்டகரியில் டாப் 10 வரிசையில் இருந்தாலாவது பரவாயில்லை. அப்படி இல்லாமல் மிகவும் பின்தங்கியிருந்தால், அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவது நல்லது. உங்களிடமுள்ள இரண்டு ஃபண்டுகளின் எஸ்.ஐ.பி-யையும் நிறுத்திவிட்டு, அவற்றுக்கு பதிலாக, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட், மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யவும்.”
என் வயது 36. நான்கு வயதாகும் என் மகனின் மேற்படிப்புக்காகவும், என்னுடைய ஓய்வுக்காலத்துக்காகவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். நீண்டகால இலக்குகளுக்காக முதலீடு செய்துவரும் நான், என் முதலீட்டை மாற்றியமைக்கக்கூடிய சூழல் ஏதும் உள்ளதா?
என் முதலீடுகள்… ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் ரூ.5,000, மிரே அஸெட் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.7,000, ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ரூ.5,000, பராக் பரிக் ஃபைனான்ஷியல் அட்வைஸரி சர்வீசஸ் (PPFAS) ஈக்விட்டி ஃபண்ட் ரூ.7,000, ரிலையன்ஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.4,000, டி.எஸ்.பி பிளாக்ராக் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.4,000, டாடா ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.4,000.
– பாலாஜி, மெயில் மூலமாக
“உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவிலுள்ள டாடா ஹைபிரிட் ஃபண்டின் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக இல்லை. கடந்த பல ஆண்டுகளாக அந்த ஃபண்டை நிர்வகிப்பதில் முன்னேற்றம் காணப்படவில்லை. எனவே, அதை விற்றுவிடவும். அதேபோல், ஹெச்.டி.எஃப்.சி டாப் 100 ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி மிட்கேப் ஃபண்டுகளின் முதலீட்டையும் நிறுத்திவிடவும். பராக் பரிக் ஃபைனான்ஷியல் அட்வைஸரி சர்வீசஸ் ஈக்விட்டி ஃபண்டின் செயல்பாடு சீராக உள்ளது. எனவே, அதை அப்படியே தொடரவும். வெளியேறிய ஃபண்டுகளுக்கு பதிலாக ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், கோட்டக் எமெர்ஜிங் ஈக்விட்டி ஃபண்ட், மோதிலால் ஆஸ்வால் ஈக்விட்டி ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீட்டைத் தொடரவும்.”
என் வயது 35. கடந்த இரண்டரை ஆண்டுகளாக மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் என்னுடைய ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய போர்ட்ஃபோலியோ நான் எதிர்பார்க்கும் அளவுக்கு நல்ல வருமானம் கொடுக்குமா..?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,500, பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.1,500, ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் டாக்ஸ் ஷீல்டு ஃபண்ட் ரூ.1,500. இவையல்லாமல் கூடுதலாக ரூ.3,000 என் மகனுடைய மேற்படிப்புக்காக நீண்டகாலத்துக்கு முதலீடு செய்யவிருக்கிறேன். இதற்கான வழிகாட்டலையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
– யோகானந்த், மெயில் மூலமாக
“உங்களுக்கு 80சி பிரிவின் வரிச் சலுகை தேவையென்றால் மட்டும் நீங்கள் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யவும்.
அப்படி இல்லையென்றால் ஓப்பன் எண்டடு திட்டங்களில் முதலீடு செய்யவும். இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுக்கு மூன்று ஆண்டுகள் லாக்இன் காலம் இருப்பதால், நீங்கள் பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் விற்க வேண்டுமென்றால் கடினமாக இருக்கும்.
நீங்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மாதம் 4,500 ரூபாய் வீதம் 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, 11% வருமானம் கிடைத்தால் 58 வயதில் ரூ.70.9 லட்சமாக இருக்கும்; 12% வருமானம் கிடைத்தால் ரூ.84.5 லட்சமாக இருக்கும். கண்டிப்பாக இந்தத் தொகை உங்கள் ஓய்வுக்காலத்துக்குப் போதுமானதாக இருக்காது. எனவே, அதற்கேற்ப பிளான் செய்துகொள்ளவும். உங்கள் மகனின் மேற்படிப்புக்கு கோட்டக் ஸ்டாண்டர்டு மல்டிகேப் ஃபண்ட், எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் தலா ரூ.1,500 முதலீடு செய்துவரவும்.”
நான் கடந்த ஆறு மாதங்களாகப் பின்வரும் நான்கு ஃபண்டுகளில் தலா ரூ4,000 வீதம் மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீடுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து செய்யவிருக்கிறேன். என் முதலீட்டு போர்ட் ஃபோலியோவில் மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா..?
என் முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் மல்டிகேப் ஃபண்ட், ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்.
– என்.செல்வகுமார், மெயில் மூலமாக
“முதலீடு செய்யும்போது கடந்தகாலச் செயல்பாட்டை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்துக்கு முதலீடு செய்வது சரியான அணுகுமுறை அல்ல.
இன்றைய காலகட்டத்தில் நீங்கள் முதலீடு செய்துவரும் அனைத்து ஃபண்டுகளும் மிக நன்றாகச் செயல்பட்டுவருகின்றன.
இருப்பினும், வரும்காலத்தில் அவை எவ்வாறு வருமானம் கொடுக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. எனவே, தொடர்ந்து இந்த ஃபண்ட் திட்டங்களின் செயல்பாட்டை கவனித்து வரவும். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து ஏதேனும் தொய்வு ஏற்பட்டால் அதற்கேற்ப முதலீட்டை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.”
நான் அடுத்த 10 ஆண்டுகளை இலக்காகக் கொண்டு சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய முதலீடுகள்… ஐ.சி.ஐ.சி.ஐ வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் ரூ.3,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் டாக்ஸ் ரிலீஃப் 96 ஃபண்ட் ரூ.2,000, ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,000. என் முதலீடுகள் சரியாக உள்ளனவா, ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா..?
– சக்தி, மெயில் மூலமாக
“இன்றைய சூழ்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. வேல்யூ ஃபண்ட் ஒரு நல்ல முதலீடாக இருக்கும். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மார்க்கெட் மிகவும் ஏற்றத்தில் இருக்கும்போது, வேல்யூ ஃபண்டின் செயல்பாடு கொஞ்சம் சுணக்கமாக இருக்கும்.
நீங்கள் ஒரு கன்சர்வேட்டிவ் முதலீட்டாளராக இருந்தால் இந்த ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்து வாருங்கள். ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி ஃபண்டின் சீரான செயல்பாடு குறைந்துவிட்டது. எனவே, அதை நிறுத்திவிட்டு, பராக் பரிக் ஃபைனான்ஷியல் அட்வைஸரி சர்வீசஸ் (PPFAS) லாங் டேர்ம் ஃபண்டில் முதலீடு செய்யவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
This article was posted in Nanayam vikatan on 19/04/2020 by Mr. Suresh Parthasarathy.