பெருந்தொற்றுக் காலம், பொதுமுடக்கம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால், வருமான இழப்பு போன்ற காரணங்களால் நிதித் தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக் கின்றன. இந்த நிலையில், பல தனியார் நிதி நிறுவனங்கள், புதிய தலைமுறை வங்கிகளிலிருந்து ரூ.50,000 முதல் சிறு தொகைக்கான கடன்களைத் தருவதாகத் தொலைபேசியில் நாள்தோறும் அழைப்புகளும், குறுஞ்செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன.
இதுபோன்ற நேரத்தில் சிறு தொகைக் கடன்கள் வாங்குவது நல்லதா, அவ்வாறு கடன் வாங்கும் போது என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதிஆலோசகர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம். விளக்கமான வழிகாட்டலைத் தந்தார் அவர்.
அத்தியாவசியமா, ஆசையா?
“சிறுகடனைப் பொறுத்தவரை, அது நமக்கு அவசியம் தேவையா, இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். தொலைபேசியில் அழைத்து கடன் கொடுக்கிறோம் என்றதும் ‘வாங்கித்தான் பார்க்கலாமே’ என்று ஆசைப்பட்டு வாங்கக் கூடாது. இதுபோன்ற நேரங்களில் கடன் வாங்காமல் முடிந்தவரை சமாளிக்கப் பார்ப்பது நல்லது.
கடன் வாங்குவதற்கான காரணம், ‘அத்தியாவசியம்’ என்ற வகையில் வருகிறதா அல்லது, ‘ஆசை’ என்ற வகையில் வருகிறதா என்று பிரித்தறிய வேண்டும். அத்தியாவசியம் எனில், கடன் வாங்குவதில் தவறில்லை. ஆசைக்காக வாங்க நினைத்தால் அதைத் தள்ளிப்போடலாம்.
தனிநபர் கடன் வட்டி விகிதம்…
அத்தியாவசியமான காரணத்துக் காகக் கடன் வாங்க முடிவு செய்தால், எவ்வளவு தொகை வாங்க வேண்டும், எத்தனை மாதத்தில் அதைத் திருப்பிச் செலுத்த முடியும், கடனைச் செலுத்து வதற்கான சாத்தியம் அல்லது வருமானம் போதுமான அளவு இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
முக்கியமாக, வட்டி விகிதத்தைக் கணக்கிட வேண்டும். வட்டி விகிதம் 14 – 16 சதவிகிதத்துக்குமேல் இருந்தால், அந்தக் கடனைக் கட்டாயமாக வாங்கித்தான் ஆக வேண்டுமா என்று யோசியுங்கள். தவிர, நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் எப்படிப்பட்டது என்பதைப் பொறுத்தும் உங்கள் கடனுக்கான வட்டி மாறும். ஓரளவு தரமான நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் எனில், 17-18% வரை கொடுப்பார் கள். கடன் வாங்குபவர், பணியாற்றும் நிறுவனம் உள்ளிட்ட சுயவிவரங்கள் திருப்திகரமாக இல்லை எனில், 21-22% வட்டியில் தான் கடன் கிடைக்கும்.
பிணைக்கடன்கள் நல்லது…
இதுபோன்ற சூழலில் பிணைக் கடன்கள் (collateral loan) வாங்குவது நல்லது. நகைக்கடனோ, வீட்டுக் கடனில் டாப்அப் செய்துகொள்வது போன்ற பிணைக்கடன்களை 8 சதவிகிதத்துக்குள் வாங்கிவிட முடியும். அத்தியாவசியத் தேவை ஏற்படும்போதுகூட சிலர் வீட்டில் பயன்படுத்தாமலிருக்கும் நகைகளை வைத்துப் பணம் பெற விரும்ப மாட்டார்கள். நகையை அடகு வைப்பது அவமானச் செயல் என்று நினைப்பார்கள். இது தவறான எண்ணம். நம் வீட்டில் இருக்கும் நகையை அடமானம் வைத்து 8% வட்டியில் கடன் வாங்கிவிட முடியும். அதுவே தனிநபர் கடன் எனில், 16% வட்டி செலுத்த வேண்டும்.
சம்பளம் பெறும் வங்கியே சிறந்தது…
பிணை வைப்பதற்கு நகையோ, வீட்டுக் கடனில் டாப்அப் பெறுவதோ முடியாதபட்சத்தில்தான் தனிநபர் கடன் வாங்குவதைப் பற்றி சிந்திக்க வேண்டும். தனிநபர் கடனுக்கு மாதச் சம்பளம் கிரெடிட் ஆகும் வங்கியை முதலில் அணுகலாம். அந்த நபரின் வங்கிப் பரிமாற்றங்கள் பற்றிய பதிவு வங்கியிடம் இருக்குமென்பதால், எளிதாகக் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, நீங்கள் அணுகுவது தேசியமயமாக்கப்பட்ட வங்கி, அதனால் கடன் நடைமுறைகளுக்கு காலதாதமாகும் எனில், வேறு தனியார் வங்கியில் முயற்சி செய்யலாம்.
இதுபோன்ற நிச்சயமற்றத்தன்மை நிலவும் காலங்களில் அதிக வட்டி விகிதம், அதிக தொகைக் கடன் ஆகியவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். குறைந்த வட்டி விகித்தில், குறைவான அளவு தொகையைப் பெற வேண்டும். எளிதில் அடைத்து முடிக்கும் வகையிலான கடன்களைப் பெறுவது நல்லது.
ஆலோசனைக்கு என்ன செய்ய வேண்டும்?
சாதாரண மக்கள் சிறிய தொகைக் கடன் வாங்குவதற்கு நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்பதெல்லாம் சாத்தியப் படாது. தற்போது எல்லாரிடமும் செல்போன் உள்ளது. அதில் குறைவான வட்டி விகிதத்தில் எங்கு, எப்படி கடன் வாங்குவது என்பது தொடர்பான விஷயங்களைத் தேடிப் பார்க்க லாம். நண்பர்கள், விவரம் அறிந்த நான்கு பேரிடம் ஆலோசனை கேட்கலாம். அதன் அடிப்படையில் கடன் வாங்குவதைப் பற்றி முடிவு செய்யலாம். கடன் விஷயத்தில் ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று முடிவெடுப்பது கூடவே கூடாது” என்றார்.
பாத்திரமறிந்துதான் கடனும் வாங்க வேண்டும்!
அத்தியாவசியப் பணம்!
கடன் வாங்கும் நிலைக்கே வரக் கூடாது எனில், அத்தியாவசியப் பணம் என்ற ஒன்றை வீட்டில் உருவாக்க வேண்டும். அதாவது, 3 – 6 மாத காலத்துக்கு குடும்பச் செலவுக்கு ஆகும் பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். இதுபோன்ற கடினமான காலங்களில் இந்தப் பணம் மிகவும் உதவியாக இருக்கும்!
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 29.6.2021 WRITTEN BY MR.SURESH PARTHASARATHY.