ஃபண்ட் கிளினிக்
முதலீட்டாளர்கள் ஒரு முதலீட்டை எடுத்து மறுமுதலீடு செய்தால் அதில் கிடைக்கக்கூடிய வருமானம் எவ்வளவு என்று ஆராய வேண்டும்.
பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளை மாதாந்தர எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு நான் தேர்வு செய்துள்ளேன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என் முதலீட்டைத் தொடர திட்டமிட்டுள்ளேன். நான் திட்டமிட்டுள்ள முதலீட்டு போர்ட்ஃபோலியோ சரியா? என் முதலீடுகள்…. சுந்தரம் செலக்ட் ஃபோகஸ்டு ஃபண்ட் ரூ.1,000, கனரா ராபிகோ புளூசிப் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.2,500, கோட்டக் ஸ்டாண்டர்டு மல்ட்டிகேப் ஃபண்ட் ரூ.1,500, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000.
– சிவகுமார்.ஜி, மெயில் மூலமாக
“உங்கள் ஃபண்ட் தேர்வில் தவறு இல்லை. ஆனால், அஸெட் அலொகேஷன் தவறாக உள்ளது. நான்கு ஃபண்டில் மூன்று லார்ஜ்கேப்பில் உள்ளன. இவை ஒரே மாதிரியான வருமானம் கொடுக்கும். இதற்கு பதிலாக இண்டெக்ஸ் ஃபண்டில் முதலீடு செய்திருந்தாலே அதிக வருமானம் கிடைத்திருக்கும். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைப்படி முதலீட்டை அமைத்துக்கொள்ளவும்.”
முதலீட்டுத் தொகை ரூபாயில்
நான் கடந்த 2017 ஜூலை முதல் பின்வரும் ஃபண்டுகளில் தலா ரூ.5,000 எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் முதலீடு செய்து வந்தேன். சில காரணங்களால் முதலீட்டை நிறுத்திவிட்டேன். ஆனால், பணத்தை வெளியே எடுக்கவில்லை. இப்போது அந்தத் தொகையை எடுத்து, பாதுகாப்பான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாமா? எனக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பணம் தேவையாக இருக்காது. நான் திட்டமிட்டிருப்பது சரியா?
என் முதலீடுகள்… எல் அண்ட் டி வேல்யூ ஃபண்ட், மோதிலால் மிட்கேப் 35 ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்.
– எஸ்.ராஜன், மெயில் மூலமாக
“முதலீட்டாளர்கள் ஒரு முதலீட்டை எடுத்து மறுமுதலீடு செய்தால் அதில் கிடைக்கக்கூடிய வருமானம் எவ்வளவு என்று ஆராய வேண்டும். இப்போது இருக்கும் முதலீட்டை, கடன் மற்றும் கடன் சார்ந்த பத்திரங்களில் முதலீடு செய்தால் தோராயமாக 5.5%-6% வருமானம் கிடைக்கும். இன்றுள்ள பொருளாதார நிலையில், உங்களுடைய முதலீட்டைத் தொடர்ந்து வரவும். 10-12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்கும் நிலையில், முதலீட்டை எடுத்து கடன் மற்றும் கடன் சார்ந்த பத்திரத்தில் முதலீடு செய்யவும்.”
நான் நடுத்தர வருமானப் பிரிவைச் சேர்ந்தவன். கடந்த மூன்று மூன்று ஆண்டுகளாகப் பின்வரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவருகிறேன். என் முதலீட்டில் எனக்கு திருப்தி இல்லை. கூடுதலாக ரூ.5,000 முதலீடு செய்யவும் தயார். என் முதலீட்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.50 லட்சம் சேர்க்க வேண்டும். அதற்கேற்ப ஆலோசனைகளைச் சொல்லவும்.
என் முதலீடுகள்… டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் பிளான் ரூ.3,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.3,000.
-அரவிந்தன், மெயில் மூலமாக
“அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் ரூ.50 லட்சத்தை அடைய வேண்டுமென்றால், மாதமொன்றுக்கு ரூ.18,700 முதலீடு செய்ய வேண்டும். 12% வருமானம் கொடுக்கும் வகையில் உங்கள் முதலீட்டைப் பராமரிக்க வேண்டும் அல்லது மாதம் ரூ.12,800 முதலீடு செய்து ஆண்டொன்றுக்கு 10% உயர்த்திக்கொண்டு வந்தால், நீங்கள் உங்கள் இலக்கை அடையலாம். உங்கள் முதலீட்டில் டாடா இந்தியா டாக்ஸ் சேவிங்ஸ் பிளான் ஃபண்டானது, லார்ஜ்கேப் பங்குகளில் முதலீடு செய்கிறது. இப்போது மிட் அண்ட் ஸ்மால்கேப் வகை அதிக திறன் பெற்றிருப்பதால் நீங்கள் கோட்டக் டாக்ஸ் சேவர் அல்லது மோதிலால் ஆஸ்வால் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். புதிதாக முதலீடு செய்யவுள்ள 5,000 ரூபாயில் 2,500 ரூபாயை கனரா ராபிகோ புளூசிப் ஃபண்டிலும், 2,500 ரூபாயை ஆக்ஸிஸ் மிட்கேப் ஃபண்டிலும் முதலீடு செய்யவும்.”
என் வயது 36. நான் கடந்த மூன்று வருடங்களாக எஸ்.ஐ.பி முறையில் கீழ்க்காணும் ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறேன். என்னுடைய குறிக்கோள் சொத்து சேர்ப்பதே. அடுத்த 20 வருடங்களுக்கு முதலீட்டைத் தொடர விரும்புகிறேன். எனது போர்ட்ஃபோலியோவில் ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது அப்படியே தொடரலாமா?
என்னுடைய முதலீடுகள்… ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் ரூ.3,000, பிரின்சிபல் எமெர்ஜிங் புளூசிப் ஃபண்ட் ரூ.2,000, எல் அண்ட் டி மிட்கேப் ஃபண்ட் ரூ.3,000, மோதிலால் ஆஸ்வால் மல்ட்டிகேப் 35 ஃபண்ட் ரூ.2,000, பராக் பரிக் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட் ரூ.1,000, எல் அண்ட் டி இன்ஃப்ரா ஃபண்ட் ரூ. 3,000, நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.2,000, ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட் ரூ.1,000.
– செந்தில், மெயில் மூலமாக
“உங்களிடமிருக்கும் முதலீட்டில் எல் அண்ட் டி இன்ஃப்ரா ஃபண்டை நிறுத்திவிடவும். அதற்கு பதிலாக, ஒரு பேலன்ஸ்டு ஃபண்டை சேர்த்துக்கொள்ளவும். கனரா ராபிகோ ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யவும். மீதமுள்ள ஃபண்டை அப்படியே தொடரவும்.
20 ஆண்டுக்கால இலக்காக இருந்தாலும், குறைந்தது ஆண்டு ஒன்றுக்கு உங்கள் முதலீட்டைப் பரிசீலனை செய்யவும். ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் மட்டும் மாற்றவும்.”
என் மனைவி மாதந்தோறும் ரூ.42,000 எஸ்.ஐ.பி முறையில் கனரா ராபிகோ எமெர்ஜிங் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் போன்ற ஃபண்டுகளில் முதலீடு செய்துவருகிறார். இந்த ஃபண்டுகளில் 20 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர விரும்புகிறார். அவருடைய இந்த முதலீடுகள் குறித்துத் தெளிவுபடுத்தவும்.
– என்.அழகுசுந்தரம், மதுரை
“இருபது ஆண்டுகள் நீங்கள் முதலீட்டைத் தொடர விரும்பினாலும், நீங்கள் முதலீடு செய்துவரும் முதலீட்டுத் திட்டங்களை ஒவ்வோர் ஆண்டும் மறுபரீசிலனை செய்வது அவசியம். 6-8 காலாண்டுகள் வரை முதலீடு செய்த திட்டங்களின் செயல்பாடு சரியில்லையென்றால், அவற்றிலிருந்து வெளியேறுவதில் தவறில்லை. எனவே, முதலீட்டை ஆண்டுக்கு ஒரு முறை மறு ஆய்வு செய்வது நம் செல்வத்தைப் பெருக்க உதவியாக இருக்கும். ஐ.சி.ஐ.சி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் முதலீடு செய்துள்ள பங்குகள் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், செக்டார்கள் அடிப்படையில் பார்க்கும்போது இன்றைய காலகட்டத்துக்கு ஏதுவாக இல்லை. எனவே, அதை நிறுத்திவிட்டு எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் அல்லது ஆக்ஸிஸ் ஸ்மால்கேப் ஃபண்டில் முதலீட்டை மாற்றியமைக்கவும்.”
தொகுப்பு: கா.முத்துசூரியா
உங்கள் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவை மாற்றியமைக்க வேண்டுமா? finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு நீங்கள் முதலீடு செய்யும் ஃபண்டுகள் குறித்த விவரங்களை அனுப்பவும்.
THIS ARTICLE WAS PUBLISHED IN NANAYAM VIKATAN ON 02.08.2020 WRITTEN BY MR. SURESH PARTHASARATHY.